ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என ராஜஸ்தான் போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும் அவர்கள் பலரை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் சிலர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை வந்த ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்த ஆரூண் என்பவரை கைது செய்தனர். இவர் பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 4-ம் தேதியன்று சென்னை வந்த ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் ஆரூண் ரஷீத்தை கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆரூண் ரஷீத் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றமற்றவர் என்ற காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.