திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களை ஐ.பி.எஸ் அதிகாரியும், உதவி காவல் கண்காணிப்பாருமான பல்வீர்சிங் குரூரமாக தாக்கி அவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஏஎஸ்பியால் பாதிக்கப்பட்டவர்கள் 10க்கும் மேற்பட்டோர் சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டு குற்றஞ்சாட்டியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். பல்வேறு அமைப்புகளும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர்சிங் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதோடு குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி சப்- கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்துகிறது. இந்தநிலையில் பாதிப்பட்டவர்களில் ஒருவர் பிறழ்சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள் இச்சம்பவத்தில் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும், காவல்துறை ஏஎஸ்பியை காப்பாற்ற முயல்வதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இச்சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பெருமாள், அம்பை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனகுமார் ஆகிய 6 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“