சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் இன்று வழக்கு விசாரணை தொடங்கிய போது வழக்கறிஞர் ஹரிநாத் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் ஆஜராகி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி இடமற்றத்தை எதிர்த்து கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று மறுத்து விட்டார். ஒவ்வொரு பிரச்னையிலும் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தற்போது எந்த வகையிலும் தலையீட முடியாது என கருத்து தொரிவித்த நீதிபதிகள் முறையீட்டை நிராகரித்தனர்.