மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை எதிர் எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும் வகையில் அமையும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
வரும் 21ம் தேதி ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருவதாக தமிழக பாஜக முன்னதாக தெரிவித்தது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில், " அமித்ஷா அவர்கள் 21ம் தேதி சென்னை வருவதாக இருக்கிறது. அரசு நிகழ்சிகளிலும், கட்சி தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். உள்துறை அமைச்சராக பதவியேற்று முதல்முறை சென்னைக்கு வருகை தர இருப்பதால், விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இந்த சிறப்பு வரவேற்பின் சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும். அதைத்தொடர்ந்து, 200 பேருக்கு மிகாமல் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து, பாஜகவின் முக்கியக்குழுவின் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டங்களில் அமித்ஷா கலந்துகொள்கிறார்.
நிச்சயமாக, அமித்ஷாவின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதாக அமையும் . தைரியத்தையும், புத்துணர்வையும் அளிப்பதாக இருக்கும். கட்சித் தொண்டர்களுக்கு புதுவித உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கும்.
அமித்ஷா வரும் நாளில், வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறும் என்பதால் அதில் அவர் கலந்துகொள்ள முடியாது. நாங்கள், கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். ஆனால், அதற்கான தகுந்த சூழல் இல்லாதிருப்பதால் யாத்திரையில் அமித் ஷா கலந்து கொள்ள வாய்ப்பில்லை, ஆனால், மற்ற அமைச்சர்கள் வருவார்கள். 22-ல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி பழநியில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், நவ.2-ல் மதுரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுவாமிமலையில் கர்நாடக செய்தித்தொடர்பாளர் மாளவிகா, தென்காசி யாத்திரையில் தேசிய செய்தித்தொடர்பாளர் புரந்தேஸ்வரி, கன்னியாகுமரியில் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் முன்னணித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இறுதி நாள் யாத்திரைக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் உறுதி செய்யப்படும்.
அமித்ஷாவின் வருகை மற்றவர்களுக்கு (எதிர்க்கட்சியினருக்குப்) பயத்தைக் கொடுக்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.