தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதுக்கோட்டையில், அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வர் பழனிசாமியை சந்திக்க சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்று, கொரொனா வைரஸ் தடுப்பு பணிகள், அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டையில், ஆய்வுக்குப் பின் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்த உடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார். மேலும், புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டபடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, புதுக்கோட்டைக்கு இன்று ஆய்வுக்காக வந்த முதல்வரை சந்திக்க சென்றபோது அதிகாரிகள் தடுத்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு சென்றபோது இரண்டாவது முறையாக மாலையும் அவரை சந்திக்க முயன்றேன் அப்போதும் தான் வெளியே ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, தான் மக்கள் பிரச்சினை பற்றி பேச முதல்வரை சந்திக்க விரும்பவில்லை. எங்கள் மாவட்டத்திற்கு விருந்தினராக வந்த முதல்வரை வரவேற்று வழியனுப்பி வைப்பதற்காகவே அவரை சந்திக்க சென்று காத்திருந்தேன். அதற்கும் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தான் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி அமமுக-வில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.