/indian-express-tamil/media/media_files/2025/10/29/armstrong-murder-case-anbumani-ramadoss-2025-10-29-17-44-05.jpg)
Armstrong murder case| Anbumani Ramadoss condemns
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து, தமிழக அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர குடும்பத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தி.மு.க. அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2வது முறையாக மேல்முறையீட்டு மனு தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் நிலவும் ஐயங்களை நீக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி ஆணையிட்டது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்பினால், சிபிஐ விசாரணையை ஏற்றுக்கொண்டு ஆவணங்களை ஒப்படைத்திருக்க வேண்டும் தி.மு.க. அரசு. ஆனால், அதைச் செய்யாமல், சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையைத் தடுக்க அரசு தீவிரம்காட்டுவது ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- இந்தக் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாகவே உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க தி.மு.க. அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதைவிட, உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டது முதல், சிபிஐ விசாரணையைத் தடுப்பதற்காக இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வரை, தி.மு.க. அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே இருப்பதாக அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
நம்பகத்தன்மையை இழந்த தமிழக காவல்துறை
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல முக்கிய வழக்குகள் சிபிஐ மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
- "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு, நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு வழக்கு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழக காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது."
அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்ட தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அரசு விரும்பினால், சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.
- உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை தி.மு.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us