முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டதாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு விடுத்தது. இவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார். அப்போது அவரின் விசாரணை ஆணையத்திற்கு மூன்று மாத காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கால அவகாசத்திற்குள் விசாரணை முடிவடையாததால், ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, ஜூன் 24-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால், தற்போது கூடுதலாக 6 மாத காலம் நீட்டிப்பு கோரி விசாரணை கமிஷன் தலைமை ஆறுமுகசாமி முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். இந்தக் கோரிக்கையை ஏற்று விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாதங்கள் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி மருத்துவர் சிவகுமாரும், மறுநாள் மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகவும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.