பிரிவினைவாத சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கிறது என துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று (14-ம் தேதி) சென்னை வந்தார். துக்ளக் பத்திரிக்கையின் 48-வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது :
மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்ப்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் மட்டுமே. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. செலவினங்களை குறைக்கும் விதமாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.