கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன், நேற்று சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 9ம் தேதி, அழகேசன் என்ற வாலிபர் மாணவி அஸ்வினியை கல்லூரி வளாகத்தின் வெளியே கத்தியால் குத்தி கொலை செய்தார். இவரை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து அடித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக் குற்றவாளியான அழகேசனை சிறப்பு பாதுகாப்பு கொண்ட தனி அறையில் அடைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர் தன் லுங்கியை கிழித்துக் கொண்டிருந்ததாகவும் , அதில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இன்னும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்பே, ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அழகேசனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகமும் பலரிடம் எழுந்துள்ளது.