மூன்றாவது திருமணத்திற்கு முயன்ற 26 வயது இளைஞரை, அவரது முதல் 2 மனைவிகள் அடித்து துவைத்த வீடியோ, சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் எஸ். அரங்கன் என்ற தினேஷ். வயது 26. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2016ல், திருப்பூர் மாவட்டத்தில் கணபதியாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்தார். அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததால், அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு பிரியதர்ஷினி சென்றுவிட்டார்.
இதையடுத்து மேட்ரிமோனியல் மூலம், கரூரைச் சேர்ந்த விவகாரத்து பெற்ற, 2 வயது குழந்தைக்கு தாயான அனுப்ரியாவை திருமணம் செய்தார். இவரையும் தினேஷ் கொடுமை செய்து, வரதட்சணை கேட்டு வந்தார். இவரது கொடுமை தாங்காமல், அனுப்ரியா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து மேட்ரிமோனியல் மூலம் மூன்றாவது திருமணம் செய்ய தினேஷ் முயற்சித்து வந்தார். இதையறிந்த அவரது இரண்டு மனைவிகளான பிரியதர்ஷினி, அனுப்ரியா இருவரும் அவர் பணியாற்றி வரும் ராசிபாளையம் தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். தினேஷை வெளியே அனுப்ப தனியார் நிறுவனம் மறுத்துவிட்டனர்.
ஆதலால், தினேஷ் வெளியே வரும் வரை நிறுவனத்துக்கு வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். அவர் வெளியே வந்தவுடன், இருவரும் இணைந்து தினேஷை செருப்பால் தாக்கினர். அவர்களது மனைவிகளின் உறவினர்களும் சேர்ந்து கொண்டு தாக்கினர்.இதையடுத்து சூலூர் போலீசார், தினேஷ் மீது புகார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.