அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு அஞ்சலி செலுத்த, பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த பாஜக தலைவர்களை, சிலர் தாக்க முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பெரியகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயலட்சுமி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 12 ஆம் தேதி பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெரியகுளம் வந்தனர்.
பாஜகவினர் பெரியகுளம் பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது சிலர் அவர்களது வாகனங்களை தாக்க முயன்றனர்.
இதனையடுத்து, பாஜக விவசாய அணியின் மாநிலத்தலைவர் ஜிகே.நாகராஜ், மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாஜகவினரை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து ஜிகே.நாகராஜ் கூறுகையில், வாகனங்களை சிலர் தாக்க முயன்றது குறித்த வீடியோ ஆதாரம் காவல்துறையினரிடம் உள்ளது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil