மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பண்டைத் தமிழர் பாரம்பரிய முறையில் கொடை விழாவை நடத்த வேண்டும் என்றும் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும் எனவும் அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் வலியுறுத்தி உள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய ஊடகத்துக்கு அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார்.
அவர் கூறுகையில், “மண்டைக்காடு கோவிலில் கொடை விழாவினை பண்டைத் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும்.
இந்து நாடார்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்மனுக்கு முழுக்க முழுக்க ஆரிய ஆதிக்க முறைப்படி முறைகளை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.
திருவிதாங்கூர் மனுதர்ம வழி அரசு கோவிலை கையகப்படுத்திய பின்னால்தான் தமிழ் மரபு முற்றிலும் அகற்றப்பட்டது.
அக்காலக்கட்டத்தில்தான் தமிழ் மரபுக்காக தியாகங்கள் பல செய்து தாய் தமிழகத்துடன் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஆனால் கோவிலின் நடைமுறை ஆரிய மனுதர்ம ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் தவிர பிறபகுதிகளில் அனைத்து கோவில்களிலும் மண்டகப்படி முறை நடைமுறையில் உள்ளது.
அதேபோல், மண்டைக்காடு கோவிலிலும் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும். இந்து நாடார்களுக்கு மண்டகப்படி வழங்கப்பட வேண்டும். முதல் நாள் கொடிக்கயிறு கொடுக்கும் மரபினை தொடர்ந்து ஒன்றாம் திருவிழா மண்டகப்படியினை நாடார் சமூகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
அதேபோல் பிற சமூகங்களுக்கும் உரிய மண்டக படிகளை வழங்க வேண்டும். மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி பெயரால் நாடார் சமூகம் தன் குல தெய்வத்திற்கு சிறப்பு செய்ய தயாராக உள்ளது.
இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற மாசி திருவிழா மார்ச் 05ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/