வங்கதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றத்தழுவு காரணமாக, தெற்கு வங்கதேசத்தின் மலைப்பகுதிகளில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ரங்கமாதி பகுதியில் 10 பேர், பான்டர்பனில் 7 பேர், மற்றும் சிட்டகாங்கில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மோசமான நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
தீவிரமான மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமா காணப்படுகின்றன. இதையடுத்து, மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் சிட்டகாங் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு மாஜிஸ்த்ரெட் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மாதம் வங்கதேசத்தில் 'மோரா' புயல் காரணமாக 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நிலச்சரிவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு தெக்கிழக்கு வங்கதேசத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது