சென்னை அடையாறு இந்தியன் வங்கி கிளையில் இன்று துப்பாக்கி முனையில் 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவரை பொதுமக்களும், போலீசாரும் மடக்கி பிடித்தனர்.
இன்று பகல் அடையாறில் அமைந்திருக்கும் இந்தியன் வங்கி கிளைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கி முனையில் அங்கிருந்தவர்களை மிரட்டி ஏழு லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து, அந்த கொள்ளையரை மூன்று பொதுமக்களும், போக்குவரத்துத் காவல்துறையினரும் விரட்டினர். இறுதியில், அடையாறு சிக்னலில் வைத்து அந்த கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளும், ஏழு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ் என்றும் தற்போது கேளம்பாக்கத்தில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என வங்கியில் உள்ள சிசிடிவியின் காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கொள்ளையடித்தவரை பிடிக்க உதவிய பொதுமக்கள் இருவர், போக்குவரத்து போலீசார் 3 பேருக்கு வெகுமதி அளித்து சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.