கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் இல்லாத 265 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி வழக்கறிஞர்களை களைவதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து பார் கவுன்சில்களை இந்திய பார் கவுன்சில் கேட்டுக் கொண்டது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக, வழக்கறிஞராக பதிவு செய்த அனைத்து வழக்கறிஞர் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியது. அப்படி அனுப்பப்பட்ட கடிதங்களில் 265 கடிதங்கள் சம்பந்தபட்ட முகவரியில் யாரும் இல்லாத காரணத்தாலும், கடிதங்களை யாரும் பெறவில்லை என்ற காரணத்தாலும் பல கடிதங்கள் திரும்பி வந்துவிட்டன.
இதனைத் தொடர்ந்து, தற்போது சான்றிதழ் அளிக்காத 265 பேருக்கும், தமிழ்நாடு புதுவை பார்கவுன்சில் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நோட்டீஸில், இன்னும் 15 நாட்களில் தங்களுடைய கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வழக்கறிஞராக பதிவு செய்த சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்காவிட்டால் வழக்கறிஞர்களாக தொழில் செய்ய தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் என்ற பெயரில் கறுப்பு – வெள்ளை உடையணிந்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்த நிலையில், பார் கவுன்சில் இந்த தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.