தென் மாநிலங்களை சேர்ந்த எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் போராட்டம் இன்று துவங்கியது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியான டெண்டர் மூலம் இவர்களுக்கான வாடகையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த டெண்டர் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அந்நிறுவனங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், பழைய ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து லாரிகளை வழக்கம் போல் இயக்கியது. இந்நிலையில், புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன. இதில், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த மண்டல வாரியான டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை கொண்டு வரப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், பல டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளது. அதே போல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பதிவெண் கொண்ட லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, இதனை கருத்தில் கொண்டு புதிய ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யக்கோரி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (12.2.18) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்