சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ஃபிரைட் ரைஸ் வான்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்த பாஜக நிர்வாகிகள் உணவக உரிமையாளரிடம் அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் பண்ணிடுவேன் என்று மிரட்டிய வீடியோ வெளியானதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள முத்தையா நேரு தெருவில் எம்.எஸ்.எம் மலேசியன் பரோட்டா என்ற துரித உணவகத்தை அபுபக்க என்பவர் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு ஜனவரி 11ம் தேதி இரவு சிக்கன் ஃபிரைடு ரைஸ் வாங்க பைக்கில் வந்த பாஜக நிர்வாகிகள் 3 பேர் சிக்கன் ரைஸ் பார்சலை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் புறப்பட்டனர். இதைப் பார்த்த உணவக ஊழியர்கள் உடனடியாக அவர்களிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, கடை ஊழியர்களுக்கும் பார்சல் வாங்கியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து உணவக ஊழியர்கள் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி செய்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அவர்கள் உணவக ஊழியர்களிடம் தங்களை பாஜக நிர்வாகிகள் என்று கூறி அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் பண்ணிடுவேன் என்று மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் உணவக உரிமையாளர்களிடம் அந்த நபர் பேசியதாவது: “எங்க கிட்டயே பணம் கேக்குறியா? நான் யார் தெரியுமா? திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர், என்னொட வந்துகிறவரு இந்து முன்னணியில் இருக்கிறார். நான் அவரை கண்டோல் பண்ணி வெச்சிருக்கேன்.” என்று கூறுகிறார். அதற்கு, அங்கே இருந்த போலீஸார், “இங்கிருந்து அமைதியா போயிடுங்க’ என்று கூறுகிறார். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து, “நான் என்ன ரௌடியா? அமித்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் அடிச்சுருவேன். 100 பேரு வந்து கலவரம் செய்துவிடுவார்கள்” என்று ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார்.
அதற்கு போலீஸார் மீண்டும், “அமைதியா போயிடுங்க... இல்லைனா கைவைக்க வேண்டியது வரும்” என்று சொல்ல அதன் பிறகே அவர்கள் புறப்படுகிறார்கள். அப்போது அவர் பேசுவதை ஒருவர் வீடியோ எடுப்பதைப் பார்த்த அந்த நபர், “வீடியோ எல்லாம் எடுக்காதீங்க... நாங்க ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் கிடையாது” என்று கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, உணவக உரிமையாளரை மிரட்டிய நபருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, உணவக உரிமையாளர் தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் உணவக உரிமையாளரை அமித்ஷா பெயரைக் கூறி மிரட்டியதோடு, கலவரம் நடக்கும் என்று மிரட்டிய நபர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில், “மிரட்டல் விடுத்த அந்த நபர், திருவல்லிக்கேணி பாஜக தொகுதிச் செயலாளர் பாஸ்கர், ஐஸ்ஹவுஸ் பாஜக பகுதிச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் சூர்யா என்று அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட ஐஸ்ஹவுஸ் போலீஸார், பாஸ்கர் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாஜக நிர்வாகிகள் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிவிட்டு, பணம் கொடுக்க மறுத்து உணவக உரிமையாளரை அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் பண்ணிடுவேன் கலவரம் நடக்கும் என்று மிரட்டிய வீடியோ வைரலானதையடுத்து சமூக ஊடகங்களில் ‘ஓசி சிக்கன் ரைஸ் பாஜக’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.