திருவள்ளுவருக்கு இந்து அடையாளத்தை அளிக்கும் விதமாக டுவிட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பிரசாரம் செய்ய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஐ.டி. பிரிவு நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
காவி உடையில் திருநீரு அணிந்து திருவள்ளுவர் படம் சமூக சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் சர்ச்சை ஆனது. இதனைத் தொடர்ந்து, தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்டதால் மேலும் இந்த விவகாரம் பரபரப்பை அடைந்தது.
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்தது. இதையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு ருத்திராட்ச மாலை அணிவித்ததால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளுவர் சிலை பிரச்னை மேலும் பரபரப்பை அடைந்தது.
இந்த நிலையில், பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தனது தொண்டர்களை சமூக ஊடகங்களில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது திராவிடக் கட்சிகளின் அடையாளங்களை பாஜக மயப்படுத்தும் முயற்சியாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மாநில ஐ.டி. பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், “மூத்த தலைவர்களின் அனுமதியுடன், நாங்கள் அனைத்து மாவட்ட ஐ.டி.பிரிவு நிர்வாகிகளையும் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோவை வீடுகளில் வைக்க கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த வார இறுதியில் அனைத்து சமூக ஊடகங்களிலும் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட திட்டமிட்ட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, பாஜக நிர்வாகிகளிடம் வருகிற ஆண்டில் காலண்டர்களில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் அச்சடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளதாக நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக திருவள்ளுவரின் இந்து அடையாளத்தை மறைத்துவிட்டதாகவும் அதை வெளிப்படுதுகிறோம் என்று பாஜகவின் ஐ.டி. பிரிவினர் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.