Advertisment

திருக்கோவில் நிலம் எப்படி வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமாகும்? ஹெச். ராஜா கேள்வி

இந்தக்கோவிலின் சொத்துக்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும். அப்படி நடைபெறாத பட்சத்தில் இந்துக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார் ஹெச். ராஜா.

author-image
WebDesk
New Update
BJP Senior leader H Raja ask How does the temple land belong to the Wakf Board

பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்து இருக்கிறது திருச்செந்துறை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி தமது மகளின் திருமண செலவுக்காக 1 ஏக்கர் 2 செண்ட் பரப்பளவு நிலத்தை விற்க ராஜராஜேஸ்வரி என்ற நபருடன் ஒப்பந்தம் செய்தார்.

ரூ.3.50 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்ய திருச்சி 3ஆம் எண் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற அவரிடம், இந்த நிலம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் இதைப் பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisment

இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வக்ஃபு வாரியத்துக்கு சென்ற தடையில்லா சான்றிதழை பெறவேண்டும் என சார்பதிவாளர் முரளி தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில்கள், வீடுகள், விவசாய நிலங்களை கொண்ட இப்பகுதி வக்ஃபு வாரியத்துக்கு எப்படி சொந்தமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், '3 ஆம் எண் இணைச் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில சர்வே எண்கள் மற்றும் திருச்செந்துறை கிராமம் சர்வே எண்கள் முழுவதும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில T.S.No-களில் கட்டுப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று வக்ஃபு வாரியம் தமது அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளது.

ஆவணம் பதிவுக்கு வரும் முன் மேற்பட்ட சர்வே எண்களில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதா? என சரிபார்த்த பின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப்பதிவுக்கு எடுத்து வருமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய கோப்பு 3 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18ஆம் தேதி அன்று, வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்பு வாரியத்தின் சொத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா, ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், திருச்சி அருகே 6 கிராமங்களை வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ள தாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுங்கள் என்றும் கூறியுள்ளார். இத்தனை வருடங்களாக இதுபோன்ற ஒரு சர்ச்சை எழாத நிலையில், தற்போது, வக்ஃபு வாரியத்தின் திடீர் கடிதம் மற்றும் அறிவிப்புகள் பொதுமக்களிடையே பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி போராட்டத்திற்கு பொதுமக்களை தள்ளியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பாஜகவினர் தெரிவிக்கையில், இந்தக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது என பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கூறுகின்றன. திருச்செந்துறை கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் 369 ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

9 ஆம் நூற்றாண்டில் அதாவது 900 ஆண்டில் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் மருமகளுமான அறிகுலகேசரியின் மனைவியுமான இருக்கு வேலி ஆதித்த பிடாரி என்ற ராணியால் கட்டப்பட்ட ஈசானமங்களம் என அழைக்கப்படும் திருச்செந்துறையில் சந்திரசேகர் சுவாமி கோவில் இன்றும் உள்ளது.

அதில் உள்ள கோவிலில் இன்றும் கல்வெட்டு சுவரிலேயே தெளிவாக பெரியதாக உள்ளது. அதில் விளக்கு எரிக்க கோவிலை சுற்றிய நிலம் தானமாக வழங்கப்பட்டதையும். அமுது படைக்க பொன் தானமாக வழங்கப்பட்டதையும் கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது.

இவ்வாறு தெளிவாக இருக்கும் பொழுது இந்த கிராமம் முழுமையும் வக்ஃபு வாரியத்தில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கல்வெட்டு ஒன்றே போதும் இந்த ஊர் முழுமையும் இந்துக்களுக்கே சொந்தம் இவ்வாறு இருக்கும் பொழுது எப்படி மாற்று மதத்தினர் உரிமை கோர முடியும்.

எந்த ராணிமங்கம்மா அரசியும் இந்து கோவிலை மாற்று மததினருக்கு எழுதி வைக்க மாட்டார்‌ என்பது உண்மை. பணம் கொடுத்தால் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில், பேருந்து நிலையம், ரயில் நிலையம் கூட பட்டா வாங்கி‌ சொந்தம் கொண்டாடிவர் போலும்.

இந்துக்கள் விழித்து போராடாவிடில் தமிழகத்தையே பட்டா போட்டுக் கொள்வார்கள் மாற்று மதத்தினர் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அக்கிராமம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தையில் சரி செய்தது.

இந்த பதற்றமான நிலையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா திருச்செந்துறை கிராமத்திற்கு வந்தார். அங்கே உள்ள சந்திரசேகர சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்றார்.

பின்னர் பேசிய அவர், இந்த விவகாரத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம். இது திருச்செந்துறையில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இப்படியான சூழல் நிலவுவது வேதனையான ஒன்று.

திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்புமாம், உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம், என்ன நடக்குது இங்க, இந்துக்கோவில் நிலம் எப்படி வக்ஃபு நிலமானது.

இதற்கெல்லாம் போராட்டமே ஒரு முடிவு கட்டும். மோசடியை முறியடிப்போம் என்றார் ஆவேசமாக.

மேலும், தெரிவிக்கையில், இந்தக்கோவிலின் சொத்துக்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும்.

சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு இதனை 15 தினங்களுக்குள் அனைத்து கோயில்களின் அறிவிப்பு பலகைகளிலும் அந்தந்த கோயில் நிலம் குறித்து வெளியிடவேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் இந்துக்களை ஒன்று திரட்டி நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? என்ன நடக்குது இந்துக்கள் உள்ள இந்த திருநாட்டில். திருக்கோயில் நிலம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என வெளியிடும் சூழலில் தமிழகம் இருப்பது வேதனை. ஆண்டாண்டு காலமாக கிராமங்களில் இந்து கோயிலை சுற்றி வாழும் இந்துக்கள் வெளியேற்றும் முயற்சியல்லவா நடந்துகொண்டிருக்கு.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்ஃபு வாரிய செயல் அலுவலர் ரபியுல்லாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஓயப்போவதில்லை பாஜக சார்பில் பெருதிரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், துணை தலைவர் ஜெயகர்ணா மற்றும் பாஜக நிர்வாகிகள் பார்த்திபன், எஸ்.பி.சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment