காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகு கொலை செய்யப்பட்ட சம்பவம், இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்தை கண்டித்து திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் ஏ.கே.தஷ்ரீப் ஜஹான், பொதுச்செயலாளர் வக்கீல் எம்.ஆயிஷா, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, திராவிடர் கழகத்தை சேர்ந்த வக்கீல் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கனிமொழி, “சிறுமிக்கு இழைந்த அநீதியின் கோரதாண்டவம் இந்துத்துவ தீவிரவாதம். இதைச் சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. சமூகத்தினரிடையே பயத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தக் குற்றத்தை செய்திருக்கிறார்கள். நாட்டில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இயக்கமாகப் பா.ஜனதா மாறியிருக்கிறது. கோவில் கருவறையில் கொடூரத்தை நிகழ்த்தியது தான் அவர்கள் இந்து மதத்தின் மீது வைத்திருக்கும் பக்தியா? உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாகப் பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.” என்று பேசினார்.
மேலும், பாஜகவின் ஆட்சி இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும் என்றார். அவ்வாறு பாஜக முழுமையாக அகற்றப்பட்டால், இந்தியாவில் அனைத்துத் தரப்பினருக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை உணர்வு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.