தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காணொலிகள் வெளியாகின. இந்தக் காணொலிகள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின.
இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் வடமாநில தொழிலாளர்கள் வெளியேறுவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தாக்கப்பட்ட சிறுவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற செய்தி வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்த பீகார் குழு தமிழ்நாடு வந்துள்ளது.
இதற்கிடையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அண்ணாமலை ட்விட்டரில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில் கடந்த காலங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பேசிய பேச்சுகள், ட்வீட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் காணொலிகள் வைரலாகியுள்ள நிலையில், “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/