ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பிகொண்டிருந்தார். அப்போது, பாஜகவினர் அவரது காரை மறித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பெண் ஒருவர் அவரது கார் மீது காலணியை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் உள்ளிட்ட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பதுங்கியிருந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வயானை ஆகிய மூன்று பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் தனலட்சுமி வீசிய காலணிதான் அமைச்சரின் கார் மீது பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil