பொள்ளாச்சியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இல.கணேசன், பாஜக தேசிய பொதுச் செயலாளர் திரு. பூபேந்திர யாதவ், தேசிய இணை பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள் தமிழகத்தில் தென்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த தீர்மானத்தில், கடந்த ஒரு வருட காலமாகவே தேச விரோத, பிரிவினைவாத மற்றும் மதவாதப் போக்குகள் தமிழகத்தில் பரவலாக தெரிகின்றன. இவர்கள் பிரதமர் மோடியை தவறாக சித்தரிக்க முயல்கிறார்கள். இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு தீர்மானத்தில், ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்திற்கு காரணமானவர்கள், அவர்களது பின்னணி, அவர்களை இயக்குவோர் போன்றவற்றையும் தமிழக அரசு நியமித்த கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.