Actor Surya Tamil News: நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த திங்கட்கிழமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவரால் அழைப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டைக்கு விரைந்து சென்ற போலீசாருக்கு, அது வெறும் புரளி என்று தெரிந்தது.
சில வாரங்களுக்கு முன்பு தன் அலுவலகத்தை ஆழ்வார்பேட்டையிலிருந்து அடையாருக்கு மாற்றியுள்ளார் சூர்யா. இருப்பினும் சூர்யாவின் அலுவலகம் இன்னும் ஆழ்வார்பேட்டையில் இருப்பதாகக் கருதி, அங்கு வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்ததை அடுத்து, குறிப்பிட்ட முகவரிக்கு உள்ளூர் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழு விரைந்தனர். வளாகத்தை நன்கு தேடிய பிறகு, அது வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அழைப்பு விடுத்த மர்ம நபரைப் பிடிப்பதற்கான தேடுதல் பணியில் காவல்துறையினர் தற்போது உள்ளனர். ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நீட், மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு சமூக நலச் சிந்தனைகளைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"