Advertisment

மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது - பி.எஸ்.என்.எல் வழக்கில் சிபிஐ வாதம்

சாட்சிகள், ஆவணங்கள் என எதுவும் இல்லாத நிலையில் எங்கள் தரப்பு நபர்களை விடுவிக்க வேண்டும் என வாதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது - பி.எஸ்.என்.எல் வழக்கில் சிபிஐ வாதம்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவிக்க கூடாது எனவும் அவர்கள் விதிகளை மீறி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு ( வழக்கு பதிவு) செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்திரிக்கையில், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்லில் இருந்து, கோபாலபுரம் , போர்ட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்ற அதி உயர் தொலைபேசி இணைப்புகளை, தனது சகோதரர் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார். மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி உள்ளிட்ட சட்டப்பிரிவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த வழக்கில் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதன் பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வாதத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சிபிஐ-யின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

இந்த வழக்கு இன்று 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விடுவிக்க கோரிய கலாநிதி, தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அவர் தமது வாதத்தில், சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் சட்டவிரோதமாக அளிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சராக பதவி ஏற்ற போது செய்து கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது. தயாநிதி மாறன் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட இணைப்புகளை சட்ட விதிகளுக்கு எதிராக அவர் வழங்கியுள்ளார். இந்த இணைப்புகள் அளித்ததன் மூலம் அரசு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கலாநிதி மாறன் மற்றும் சன் டிவி ஊழியர்கள் கூட்டு சதியில் ஈடுபடுபட்டுள்ளனர். அரசை ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்கள் உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து குற்றச்சாட்டபட்ட யாரையும் விடுவிக்க கூடாது. விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் வழக்கை எதிர் கொள்ள குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்தை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் சார்பில் முறைக்கேடு இல்லாத போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள், ஆவணங்கள் என எதுவும் இல்லாத நிலையில் எங்கள் தரப்பு நபர்களை விடுவிக்க வேண்டும் என வாதத்தை நிறைவு செய்தனர்.

இதனையடுத்து, வழக்கின் இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை மார்ச் 6 தேதி எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நடராஜ் விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment