Advertisment

பி.எஸ்.என்.எல் வழக்கு: மாறன் சகோதரர்களின் மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ பதில் மனு

மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை  வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ சார்பில் பதில் மனு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dayanidhi Maran, Kalanidhi Maran, மாறன் சகோதர்கள், மாறன் சகோதரர்கள் மீது டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு

Dayanidhi Maran, Kalanidhi Maran, மாறன் சகோதர்கள், மாறன் சகோதரர்கள் மீது டெலிபோன் இணைப்பக மோசடி வழக்கு

பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை  வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

Advertisment

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக கடந்த 2004 முதல் 2007 வரை  தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்-ன் அதி விரைவு  தொலைபேசியின் 323 இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டது.  அதன்படி, தயாநிதி மாறன்,  2007-ல் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். 

இந்நிலையில், இந்த வழக்கில்,  சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த  ஆண்டு (2016) டிசம்பர் மாதம் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

அதில் கடந்த 2004 முதல் 2007ம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்-ல் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதித்து, அதி உயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  மேலும் இந்த வழக்கின் கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை நகல் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நடராஜன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது,  கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகவில்லை ஆனால் சன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், தயாநிதி மாறன் தனிச் செயலாளர் கவுதமன், எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். 

மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம்சாட்டபட்ட 7 பேர் தாக்கல் செய்த மனுவிற்கு சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றம் கருதியதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் இவர்களின் மனுக்களை ஏற்க கூடாது. அவைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களை சிபிஐ தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மாறன் சகோதரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதற்கு பதில் அளிக்க மூன்று வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதை ஏற்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை இம்மாதம் 21-ம் தேதி தள்ளி வைக்கிறேன். அதற்குள் இந்த கூடுதல் ஆவணங்களுக்கு பதில் அளியுங்கள் என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் வழக்கு அன்றைய தினத்துக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.  

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் வேலுச்சாமி, பிரம்மநாதன், மாறன்  சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

Kalanithi Maran Bsnl Cbi Dayanidhi Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment