Advertisment

புல்லட் நாகராஜன் கைது: கைத்துப்பாக்கி, கட்டுக் கட்டாக கள்ள நோட்டு பறிமுதல்

புல்லட் நாகராஜன் மடக்கப்பட்டதை போலீஸார் சற்றே நிம்மதி பெருமூச்சுடன் பார்க்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புல்லட் நாகராஜன் கைது, சிறைத்துறை எஸ்.பி.யை மிரட்டிய புல்லட் நாகராஜன் கைது, Bullet Nagarajan Threats Madurai Jail Officers

புல்லட் நாகராஜன் கைது, சிறைத்துறை எஸ்.பி.யை மிரட்டிய புல்லட் நாகராஜன் கைது, Bullet Nagarajan Threats Madurai Jail Officers

புல்லட் நாகராஜன் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டான். சிறைத்துறை எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரை மிரட்டிய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதான புல்லட் நாகராஜனிடம் கைத்துப்பாக்கி, கட்டுக்கட்டாக கள்ள நோட்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

புல்லட் நாகராஜன், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பெயர்! மதுரை சிறைத்துறை சூப்பிரெண்டு ஊர்மிளாவை மிரட்டி கடந்த 6-ம் தேதி புல்லட் நாகராஜன் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல பெரியகுளம், தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவை மிரட்டி மற்றொரு ஆடியோவும் வெளிவந்தது. அதில், ‘நீ என்ன விஜயசாந்தியா?’ என்கிற ரேஞ்சில் புல்லட் நாகராஜன் மிரட்டியிருந்தான்.

புல்லட் நாகராஜனை பிடிக்க பெரியகுளம் தென்கரை போலீஸார் வலை விரித்து வந்தனர். இன்று புல்லட் நாகராஜனை போலீஸார் கைது செய்தனர். போலீஸாருக்கு சவால் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் மடக்கப்பட்டதை போலீஸார் சற்றே நிம்மதி பெருமூச்சுடன் பார்க்கிறார்கள்.

Bullet Nagarajan Arrested: புல்லட் நாகராஜன் கைது பின்னணி தொடர்பான இதர தகவல்கள்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவன் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவனது அண்ணன் 2006ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.

இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்ததை தம்பியிடம் கூற, உடனே எஸ்பி ஊர்மிளாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினான். ‘அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா? அடுத்து, உங்கள் மேல் லாரி ஏறும்’ என மிரட்டல் விடுத்தான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டினான்.

பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்து பேசிய புல்லட் நாகராஜன், “இனி யாரையும் நீங்க அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது” என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

போலீஸாருக்கே பெரும் சவாலாக இருந்த புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவை மிரட்டிய வழக்கில் ரவுடி புல்லட் நாகராஜை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை பெரியகுளம் விரைந்தது.

டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான படையினர் இன்று புல்லட் நாகராஜனை துரத்திப் பிடித்தனர். ஒரு பல்சர் பைக்கில் வந்தபோது புல்லட் நாகராஜனை போலீஸார் மடக்கிப் பிடித்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

புல்லட் நாகராஜனின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! அவர் இறந்துவிட்டார். அவரது தாயார் பெயர், மாலா! புல்லட் நாகராஜன் மனைவி சென்னையில் இருப்பதாக தெரிகிறது.

கைதான புல்லட் நாகராஜனை தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீஸார் விசாரித்தனர். அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment