முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் பார்வையாளர்கள் அறை, முக்கிய நபர்களை சந்திக்கும் அறை மற்றும் மேல் மாடியில் ஓ.பி.எஸ்-இன் ஓய்வு அறை போன்றவை உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள், ஓ.பி.எஸ் ஓய்வு எடுக்கும் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள் ஏதும் இல்லாததால் 54 இன்ச் டி.வி.,யை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று (அக்.15) காலை வீட்டின் காவலர் வழக்கம்போல் உள்ளே சென்று பார்த்தப்போது, டி.வி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்து பண்ணை வீட்டுக்கு விரைந்து சென்ற பெரியகுளம் தென்கரை போலீசார், வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil