Advertisment

ஜெயலலிதா மரணம்: விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதா மரணம்: விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. எம். விஜயன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ' தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

விசாரணை ஆணையம் அமைத்ததில் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. முதல் அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால், அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல், விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட முடியாது' என்று வாதிட்டார்.

அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதில் எந்த விதிமீறலும் கிடையாது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை ' என்று கூறப்பட்டு இருந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ஆணையம் சட்ட விதியில், தீர்மானம் போட்டுதான் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதில்லை. அரசு தன்னிச்சையாக கூட, விசாரணை ஆணையம் அமைக்க அதிகாரம் உள்ளது. மனுதாரரின் கோரிக்கையும், நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் , அரசும் செய்துள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதிபதி விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரர் குற்றாச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை

விசாரணை வெளிப்படையாக இருக்குமா என்பது பற்றி மனுதார் கவலைப்பட தேவையில்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment