விசிக தலைவர் திருமாவளவனை அவமதிக்கும் வகையில் கார்டூன் வரைந்த விவகாரத்தில் கைதான கார்டூனிஸ்ட் வர்மா, முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதாக அளிக்கப்பட்ட புகாரில் 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்டூனிஸ்ட் சுரேந்திர குமார் என்கிற வர்மா (30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் அனிமேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கார்டூனிஸ்ட் வர்மா கடந்த மே மாதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவனை அவமதிக்கும் வகையில் கார்டூன் வரைந்து வெளியிட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கார்டூனிஸ்ட் வர்மா, இறைத்தூதர் முஹமது சல் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கிறார் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர் ரியாஸ் அஹமது விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விழுப்புரம் போலிசார் கார்டூனிஸ்ட் வர்மாவை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்த கைது குறித்து விழுப்புரம் போலீசார் கூறுகையில், கார்டூனிஸ்ட் வர்மா மீது ஐபிசி 153ஏ, 295ஏ, 504, 505(1), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கார்டூனிஸ்ட் வர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"