காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவு குழப்புவதாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
காவிரி பிரச்னையில் இன்று (ஏப்ரல் 9) உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசின் விளக்கம் கோருகிற மனுவின் மீது இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று இடைக்கால ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கிற தகவல்களின்படி மத்திய அரசு ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து மே மாதம் 3-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. ஏற்கனவே ஆறு வார காலத்திற்குள் ஒரு ஸ்கீமை உருவாக்கிட வேண்டுமென்ற தீர்ப்பினை மத்திய அரசு ஆறு வார காலம் கிடப்பில் போட்டதை பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டிக்கத் தவறிவிட்டது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை, ‘ஸ்கீம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம் என நீதிபதிகள் சொல்லியிருப்பதும், மேலும் இப்பிரச்சனையை குழப்பி விடுவதாக அமைந்துள்ளது. பிப்.16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில், நடுவர் மன்றத்தினுடைய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு (காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உட்பட) குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் என கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மே மாதம் 3-ம் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னரும் வாத பிரதி வாதங்கள் என்ற முறையில் மேலும் இந்த வழக்கை இழுத்துக் கொண்டே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இன்றுள்ள பிஜேபி தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குகிற வகையில் அதிக அதிகாரங்கள் கொண்ட வரைவு திட்டத்தை செயல்படுத்தாமல், பெயரளவிற்கான திட்டத்தை அமைத்து தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்திற்கு நியாயம் வழங்குவதாக அமையவில்லை. மேலும், இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் இருக்கிற அனைவரும் ஒன்றுபட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை உறுதியாக போராட்டத்தை தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.