காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு இன்றுடன் முடிந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீடை 14 டி.எம்.சி குறைத்தது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின் இதர அம்சங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு இன்றுடன் (மார்ச்.29) முடிந்தது.
ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேயில்லை. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கிய நிலையிலும், மத்திய அரசு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை' என நவநீதிகிருஷ்ணன் எம்.பி. ராஜ்யசபாவில் நேற்று பேசி இருந்தார். ஆனால், இறுதிவரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை அன்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை காலை இதனை அவசர வழக்காக விசாரிக்க, தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. சனி அல்லது திங்கட்கிழமை தமிழக அரசு மனுத் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. மனுவுக்கு தேவையான ஆவணங்கள் நாளை தயாராகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.