திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை மாலையில் நடக்கிறது. அதற்குள் பிரதமர் அப்பாய்ன்மென்ட் உறுதி செய்யப்படாவிட்டால் போராட்டம் அறிவிப்பார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தினர். அதன் முடிவில் கடந்த 13-ம் தேதி தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அப்பாய்ன்மென்ட் பெற்றுத் தரும்படி ஆளுனரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளுனரும் அதற்கு உரிய முயற்சிகளை செய்வதாக கூறினார்.
இதற்கிடையே திமுக தோழமைக் கட்சிகள் எஸ்.சி, எஸ்.டி சட்டத் திருத்தம் தொடர்பாக நாளை (ஏப்ரல் 16) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்திற்கு முன்பு பிரதமரின் அப்பாய்ன்மென்ட் குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை எந்தத் தகவலும் கிடைக்காவிட்டால், காவிரி பிரச்னையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அடுத்தக்கட்டப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டமாக அமையும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.