அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியில் தெற்கு ஆந்திரா பகுதியில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமாக மழையும் பெய்யக்கூடும். இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.
அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ, கேளம்பாக்கம், ஜெயம்கொண்டம் 7 செ.மீ, காஞ்சிபுரம், செய்யாறு 6 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், அரியலூர் , மீனம்பாக்கம், திருப்பத்தூர், குமாரபாளையம், கடலூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.