ஏர்பஸ் ஏ-380 மற்றும் பி 747-8 போன்ற பிரமாண்ட விமானங்களை கையாளும் வகையில், சென்னை விமானநிலையத்தில் வசதிகள் இல்லாதது பெரும்குறையாகவே உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்தவாரம், ஏர் சீனா பி 747-8 விமானம் மூலம் சென்னை வந்தார். அதேபோன்ற மற்றொரு விமானத்தில் 200க்கும் மேற்பட்ட சீன அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் வந்தனர். இதுபோன்ற பிரமாண்ட விமானங்கள், சென்னை விமானநிலையத்திற்கு வருவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏரவேசின் ஜம்போ விமானம், சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ் ஏ 380 மற்றும் பி 747-8 போன்ற விமானங்களில் 400க்கும் மேற்பட்டோர் பயணிக்க முடியும். இந்த விமானத்தில் வரும் பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு ஏரோபிரிட்ஜ்கள், சென்னை விமானநிலையத்தில் இல்லை, அதுபோல பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷட்டில் பஸ்களும் இங்கு போதுமானதாக இல்லை. முக்கியமான, அவ்வளவு பெரிய ஜம்போ விமானங்களை நிறுத்த போதுமான நிறுத்துமிடம் இல்லை.
பிரிட்டிஷ் ஏர்வேசின் விமானம் மற்றும் ஏர் சீனா விமானம், சென்னை விமானநிலையம் வந்திருந்தபோது மற்ற விமானங்களின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. ஏனெனில் இந்த ஜம்போ விமானங்களின் இறக்கைகள், அளவில் பெரியதாக உள்ளதால், ரன்வேயின் பெரும்பாலான பகுதிகளை அது அடைத்துக்கொள்வதால், ரன்வேயை, மற்ற விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் அதிகளவில் பயணிகளை கையாளும் வகையிலான புதிய டெர்மினல், டாக்ஸிவேக்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஜம்போ விமானங்களை கையாள்வதற்கான வசதிகள் இல்லை என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் ஏர்பஸ் ஏ-380 ரக விமானங்கள் அவசர தரையிறக்கத்திற்கு, ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமானநிலையங்களில் வசதிகள் உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இயக்குனர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.