Chennai Airport New Traffic Regulation for Cars: சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இதுவரையில் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. இதனால் நேர விரயம் ஏற்பட்டு வந்த நிலையில், அதைத் தவிர்க்க புதிய போக்குவரத்து முறை டிசம்பர் 27 (இன்று) காலை 11 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு தனித்தனி நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் புறப்பாடு, வருகை இரண்டு பகுதிகளையும் தனித்தனியே அணுக முடியும். இரு முனையங்களிலுமே புறப்பாட்டு பகுதிக்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு விமானநிலையத்தில் இருந்து வெளியேறி விடவேண்டும். பார்க்கிங் வசதியை பயன்படுத்த முடியாது.
இதேபோல வருகை பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள், பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தனி வழியும், பார்க்கிங் செய்வதற்கு தனிவழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் இடத்திற்கு வந்த பிறகு பார்க்கிங் வசதியை பயன்படுத்த முடியாது என்பதோடு, பயணிகளை ஏற்றிக் கொண்ட பின் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.
புதிய போக்குவரத்து முறைப்படி, உள்நாட்டு முனையத்தில் பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி, ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் வழியாக ஓட்டிச்சென்று புறப்பாட்டு முனையத்தை அடைய வேண்டும். பன்னாட்டு முனையத்தில் பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள், புதிய நுழைவாயில் வழியாக நுழைந்து, இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தின் வழி சென்று புறப்பாட்டு முனையத்தை அடைய வேண்டும்.
இரு முனையங்களிலும் உள்ள வருகை முனையத்தை அடையும் வாகனங்கள், தரைதளத்தில் இதே சுழல் வழிமுறையை பின்பற்ற வேண்டும். விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் நோக்கி செல்ல 'யு டர்ன்' எடுப்பதற்காக ஜிஎஸ்டி சாலையில் மூன்று இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. கிண்டியில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் வாகனங்கள் விமானநிலையம் நுழைவதற்கு இரண்டு 'ரைட் டர்ன்' திறக்கப்பட்டுள்ளன.
பார்க்கிங்கில் உள்ள வாகனங்கள், பார்க்கிங் பகுதியில் பிக்கப்புக்கு என குறிக்கப்பட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டும். டோல் பூத்துகளில் நுழைந்து, வெளியேற 10 நிமிட அவகாசம் வழங்கப்படும். முனையங்களின் முன்பு தேவைப்படும் நேரத்தைவிட வாகனங்கள் கூடுதல் நேரம் நின்றிருந்தால் அபராதம் விதிக்கப்படும். முனைய கட்டிடத்தின் முன்பு, தனியார் வாகனங்கள் மட்டுமே பிக்அப் செய்ய அனுமதிக்கப்படும்.
ஓலா தவிர்த்த பிற வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. பிற வாடகை வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் வைத்து பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் தற்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். புதிய போக்குவரத்து முறை திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கட்டண விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.