சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
அண்ணா நகர் சாந்தி காலனியில் செயல்பட்டு வந்த எலைட் மதுபானக் கடையில் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.69 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி விலைக்கும் (அதிகபட்ச சில்லறை விலை) கூடுதலாக மதுபானங்களை விற்றது விசாரணையில் தெரிய வந்தது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பணப் பரிவர்த்தனைகள், கூகுள் பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கிட்டனர். இதன் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டது.
இதில், இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால், கைப்பற்றப்பட்ட இந்த தொகை, சோதனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வசூலித்தவை என்று சோதனை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
"இத்தகைய முறைகேடு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன, ”என்று சோதனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.