கொரோனா அச்சத்தால் ரயில் நிலையங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க பயணிகளை வழியனுப்ப அதிகம் வருபவர்களைக் கட்டுப்படுத்த சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை தெற்கு ரயில்வே (பிளாட்ஃபார்ம்) ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு மார்ச் 31வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், மால்கள், தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, ரயில் நிலையங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க, ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை தெற்கு ரயில்வே (பிளாட்ஃபார்ம் டிக்கெட்) 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய் பரவலை அடுத்து தெற்கு ரயில்வே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிக அத்தியாவசியமில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் வருகிற பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, சென்னை பிரிவு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ரூ.10 நடைமேடைக் கட்டணம் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வருகிற இந்த கட்டண உயர்வு 2020 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"