கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேகரன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். மேலும், இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கன்டைனர் வாடகைக்கு விடுவது உட்பட பல தொழில்களை செய்து வருகின்றார்.
இவருக்கு சென்னையை சேர்ந்த லட்சுமிபதி மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் அறிமுகமாகினர்.
சந்திரசேகரிடம், நிர்மலா சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும், தங்களது வீடு பாபா வசிக்கும் வீடு எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
சந்திரசேகரனிடம் தாங்கள் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் கோடி கணக்கில் சாய்பாபா அருளாளல் லாபம் கிடைக்கும் என்றும் இதன் மூலம் கூடுதல் சமூக சேவையை செய்ய முடியும் என கூறியதை நம்பி, லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினர்களான மோகன்தாஸ், ரேகா, கணேசன், கஜலட்சுமி, உமாபதி, மாலினி ஆகியோரிடம் பல தவணைகளாக 73 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை வாங்கிய பின் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சந்திரசேகரன் பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை கொடுக்க முடியாது எனக்கூறிதோடு மிரட்டியுள்ளனர்.
இதனால் சந்திரசேகர் கோவை குற்றபிரிவில் புகார் அளித்த நிலையில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்து 3 மாதம் ஆகிய நிலையிலும் கைது நடவடிக்கை எடுக்காததால் சந்திரசேகரன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ண்ணை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து 8 பேருக்கும் நேரில் ஆஜராக குற்றபிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர்கள் ஆஜர் ஆகவில்லை. இந்நிலைநில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் 8 பேரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், சாய்பாபா பேரை சொல்லி ஆசை வார்த்தை கூறி இவர்கள் பலரை ஏமாற்றி இருப்பதாகவும் புகார்தாரர் சந்திரசேகர் தெரிவித்தார் .
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil