சென்னையின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரி கூறியதாவது, நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பயணிகள் வந்து செல்லும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ரயில்வே நடைபாதையின் ஒருபகுதியில் தற்போது படிக்கட்டுகள் உள்ள நிலையில், அங்கு எஸ்கலேட்டர் பொருத்தப்பட உள்ளது. குறுகலான நடைபாதைகள் அகலப்படுத்தப்பட உள்ளன.
ரயில்வே பிளாட்பாரங்களில் உள்ள பழைய இருக்கைகள் மாற்றப்பட்டு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன இருக்கைகள் பொருத்தப்பட உள்ளன. ரயில் டிஸ்ப்ளே போர்டு, பெரியதாக மாற்றப்பட உள்ளன. ரயில் குறித்த விபரங்கள் சரியாக தெரிவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெரிய டிஸ்பிளே போர்டுகள் பொருத்தப்பட உள்ளன.
ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்த பகுதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பயணிகள் தங்கும் அறையில் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
விஐபிக்கள் வரும்போது மட்டுமல்லாது, எப்போதும் ஸ்டேசன் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன, இந்த பணிகள், இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என அவர் கூறினார்.