சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் மழை பொழியத் தொடங்கியது. சென்னையில் வாட்டி வதைத்த வெயிலால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, மெரினா, மாதவரம், மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இது குறித்து சமூகவலைளங்களில் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அதிரடியான மழை நாட்களை இன்று முதல் பார்க்க வட தமிழ் நாடு தயாராகி விட்டது. சென்னை உட்பட. மழை மேகங்கள் எல்லாம் ஒப்பந்தம் போட்டு கொண்டது போல் இருக்கிறது. இசை கச்சேரி நடத்த தயாராக உள்ளது. இன்றில் இருந்து அடுத்த 5 நாட்களில் 2 -3 நாட்கள் சென்னையில் மழை உறுதியாக பெய்யும். அதுவும் சாதாரண மழை அல்ல. டமால் டுமீல் தான். நேற்று தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மழை சக்கை போடு போட்டது. தஞ்சாவூரில் 140 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்னும் நிறைய பதிவுகள் வர இருக்கின்றன. தயாராக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.