மாற்றுத் திறனாளி்கள் சட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு, 2016 ம் ஆண்டு கொண்டு வந்த மாற்றுத் திறனாளி்கள் சட்டத்தை ஏற்றுக் கொண்ட ஆறு மாதங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இதன்படி, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இளம் குழந்தைகள் உரிமைகள் குறித்த அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் இந்த விதிகளை வகுத்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்பாக வெளியிடப்படும் என தமிழக அரசு உறுதியளித்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்த விதிகளை வகுத்து, இரண்டு மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.