தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 8 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் உதவி ஆய்வாளராக 1987-ல் பணியில் சேர்ந்த காளியண்ணன் தனது பிறந்த தேதியை 25-5-1959 என இருப்பதை 20-9-1960 என மாற்ற கோரி அளித்த மனுவை அரசும் மாநில நிர்வாக தீர்ப்பாயமும் நிராகரித்தன.
பின்னர், தன் பிறந்த தேதியை மாற்ற கோரி காளியண்ணன் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற வேண்டிய அவருக்கு தமிழக அரசு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கியது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த பால்வண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், காளியண்ணனின் பிறந்த சான்றிதழில் அவர் 1959-ம் ஆண்டில் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின் எதன் அடிப்படையில் காளியண்ணணுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என அவர் விளக்கமளிக்க வேண்டும், அவருக்கு பதவி வழங்கியதை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனு குறித்து 8 வார காலத்திற்குள் தமிழக அரசு மற்றும் காளியண்ணன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்