கோவை மாவட்டம், மதுக்கரை கிராமத்தில் சுந்தராபுரம் - நாச்சிபாளையம் சாலையில் 700 குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து அந்த பள்ளியில் படிக்கும் குழந்தையின் தந்தை மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛இந்த பெட்ரோல் பங்க்கில் இருந்து வெளியேறும் ஆபத்தான வாயுக்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் பெட்ரோல் பங்க்குகள் அமைக்க வேண்டும். ஆனால், இந்த பெட்ரோல் பங்க், 25 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட உள்ளது’ என வாதிட்டார்.
இதையடுத்து, 700 குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க் அமைக்கும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும், அந்த நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பெட்ரோல் பங்க்களில் இருந்து வெளியாகும் பென்ஸீன் எனும் வேதிப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும். மழலையர் பள்ளிகளுக்கு அருகில் பெட்ரோல் பங்க் அமைக்க தடை விதித்து தமிழக அரசு, 2015ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அருகிலும் பெட்ரோல் பங்க் அமைக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு விதிகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுவுக்கு அக்டோபர் 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.