தமிழகத்தில் நீர் மற்றும் காற்று மாசுபாடுகளை கட்டுப்படுத்துவது அரசின் கடமை இல்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கத்தின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் காற்று மற்றும் நீர் மாசுபாடுகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக குடிசை பகுதிகளில் இந்த பிரச்சனை அதிகரித்து வருவதாகவும், அங்கு வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான நீர் மற்றும் சுத்தமான காற்று ஆகியவை கிடைப்பதில்லை. எனவே குடிசைப் பகுதிகளில் ஏற்படும் நீர், காற்று மாசை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காற்று மற்றும் நீர் மாசு பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளில் யார் யாருக்கு கோரிக்கை மனு அளித்தார் என்ற விவரங்களை குறிப்பிடாமல் வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், மனு அளித்தாலும், இல்லாவிட்டாலும் மாசிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமை இல்லையா? என கேள்வி எழுப்பினார். காற்று மற்றும் நீர் மாசுபாட்டில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் பணி என குறிப்பிட்டனர். தற்போது எங்கு தான் மாசு இல்லாமல் இருக்கிறது. நீதிபதிகளின் அறைகளை திறந்து வைக்க கூட முடியாத அளவிற்கு மாசு எல்லா இடத்திலும் தான் உள்ளது. இவ்வாறு காற்று மாசுபாடுகள் உள்ளதால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் வருவதாகவும், குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.