இசையமைப்பளார் இளையராஜா நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து ஸ்டுடியோவுக்குள் உள்ள தனது இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இளையராஜா தீர்மானிக்காலம் என்றும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டுடியோவிற்குள் இருக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரி தொடா்ந்த வழக்கு, காவல்துறையில் கொடுத்த குற்ற புகார் ஆகியவற்றை இளையராஜா வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும், ஸ்டுடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவிற்குள் இளையராஜாவை அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இசைக்கூடத்தில் தனது இசை கருவிகள், இசை கோப்புகள், விருதுகள் உள்ளதாகவும், அவை எடுத்து செல்ல தன்னை அனுமதிக்க நிர்வாகத்திற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரனையின் போது, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றால் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என்று ஸ்டுடியோ நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது .
இந்நிலையில், ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோரி தொடா்ந்த வழக்கு, காவல்துறையில் கொடுத்த குற்ற புகார் ஆகியவற்றை இளையராஜா வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ:
இளையராஜா 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்துதான் திரைப்படங்களுக்கு பின்னனி இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாக பொறுப்பை ஏற்றவுடன், பிரசாத் ஸ்டுடியோ நஷ்டத்தில் இயங்குவதால், இசைக்கூடத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகைக் கேட்டதாக கூறப்படுகிறது… பிறகு, ஸ்டுடியோவை வேறு தேவைக்காக இடித்து கட்டப் போகிறோம், எனவே வெளியேறுங்கள் என்று இளையராஜாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது