சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிருஷ்டவசமானது என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி ஐ எஸ் எஃப்)பாதுகாப்பை அமல்படுத்த கோரிய வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (30.01.2020) அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் (ஹரிப்பரந்தாமன், கண்ணன் உள்ளிட்டோர்) பங்கேற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
நீதிமன்றத்திற்கு இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? நீதிமன்றம் பொது சொத்து, தனி நபர்களானது அல்ல என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்ப்பட வேண்டும். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்ப்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது. போராட்டம் பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை.
நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி முன்னாள் நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும் என்றனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகிறார். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.