டிடிவி.தினகரன் மீதான அந்நியசெலவாணி மோசடி வழக்கை விசாரித்து முடிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 'பார்க்லே' வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை 'டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது,
இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட், டெண்டி இன் வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாவும் டிடிவி தினகரன் மீது மற்றொரு அன்னிய செலாவணி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் கடந்த 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்தநிலையில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை தரவில்லை என்றும், எனவே, அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், எழும்பூர் நீதிமன்றம் மீண்டும் அவரிடம் குற்றச்சாட்டுப் பதிவை நடத்த வேண்டும். அதேபோல, தினகரன் மீதான வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 17 ம்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் வழக்கை விசாரித்து வரும் எழும்பூர் நீதிபதி மலர்மதி, வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 2 மாதம் காலம் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மேலும் 2 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.