ஆளுநர் விருந்து புறக்கணிப்பு : ஒவ்வொரு வருடமும் சுதந்திரதின விழா முடிந்த பின்பு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். 72வது சுதந்திர தினவிழா முடிந்த பின்பு பன்வரிலால் புரோஹித் சார்பில் நேற்றும் தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவ்விருந்தினை புறக்கணித்துவிட்டனர்.
கடந்த ஞாயிறு அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முறைப்படி நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
அவர்களுக்கு உரிய மரியாதை அவ்விழாவில் வழங்காததால் நேற்று நடைபெற்ற தேநீர் விருந்தினை புறக்கணித்துவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி தவிர யாரும் வரவில்லை.
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் நீதிபதிகள் அனைவரும் அமைச்சர்களுக்கு பின்வரிசையில் அமரவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் மாளிகையில் கொடுத்த தேநீர் விருந்தினை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் விருந்து புறக்கணிப்பு : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விழாவில் ஏற்பட்ட குளறுபடிதான் காரணம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தஹில் ரமணியின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.
இது போன்ற விழாக்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது.
ஆனால், அன்றைய விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.