பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் கருத்தை அறிந்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர்அலி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தலை வரும் மார்ச் 28 நடைபெறும் என இந்திய பார்கவுன்சில் அறிவித்தது. இந்த தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தக்கோரி வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி, கடந்த தேர்தலின்போது இனோவா, சவர்லட் கார்கள் சங்க நிர்வாகிகளுக்கு பரிசுதரப்பட்டதாகவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கு 30 ஆயிரம் வரை வேட்பாளர் தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதும், போட்டியிடுபவர்கள் ஒவ்வொருவரும் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வருவதாக தெரிவித்தார். எனக்கு அதிகாரம் இல்லாத நிலையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்றும் தனி அமைப்பிடம் தேர்தல் நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கில் விசாரணை நடத்தமுடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகி மனுதரார்கள் விளக்கம் பெற்றுவருமாறு அறிவுறுத்தினர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.